Wednesday, August 12, 2009

சுதந்திர தினவிழாவில் நடிகர் லாரன்சுக்கு சமூக சேவை விருது : கருணாநிதி வழங்குகிறார்

வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா அரசு சார்பில் நடைபெறுகிறது. இதையொட்டி, அன்று நடைபெறும் அணிவகுப்பை முதல்- அமைச்சர் கருணாநிதி காலை 8.25 மணிக்கு பார்வையிடுகிறார். அவருக்கு தலைமை செயலாளர் ஸ்ரீபதி, ராணுவ படை தளபதிகளையும், போலீஸ் உயர் அதிகாரிகளையும் அறிமுகம் செய்து வைக்கிறார்.

8.30 மணிக்கு தேசிய கொடியை முதல்- அமைச்சர் கருணாநிதி ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றுகிறார். பின்னர் துணிவு மற்றும் சாகச செயல்களுக்கான கல்பனாசாவ்லா விருது, ஊனமுற்றோர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற் றியவர்களுக்கான விருதுகளை வழங்குகிறார்.



கல்பனா சாவ்லா சாதனை விருதை ராஜமகேஸ்வரி, புஷ்பாஞ்சலி, ராஜலெட்சுமி ஆகியோர் பெறுகிறார்கள். சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கான விருது காஞ்சீபுரம் மனோகரன், கே.கே.நகர் ஜெயக்குமார், திருச்சி பாண்டி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த சமூக சேவை செய்தவர்களுக்கான விருதை நடிகர்லாரன்சுக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி வழங்குகிறார். திருவான்மியூர் பிரசாத், நெல்லை சங்கர் ராமன், பழவந்தாங்கல் சேதுகுமாரி ஆகியோரும் சிறந்த நிறுவனம் மற்றும் சமூக சேவைக்கான விருதுகளை பெறுகிறார்கள்.

விருது கிடைத்தது பற்றி லாரன்ஸ் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

எனக்கு சிறந்த சமூக சேவைக்கான அரசு விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கடந்த 3 வருடங்களாக ஆதரவற்றோருக்கும் ஊனமுற்றோருக்கும் அறக்கட்டளை துவங்கி உதவிகள் செய்து வருகிறேன். அசோக்நகரில் உள்ள எனது வீட்டில் 60 ஆதரவற்ற குழந்தைகளை தங்க வைத்துள்ளேன்.

அவர்களுக்கான உணவு, படிப்பு செலவுகள் அனைத்தையும் கவனித்துக் கொள்கிறேன்.

மேலும் 40 பேர் அங்கேயே இலவசமாக தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகிறார்கள். அவர்களுக்கான செலவையும் செய்கிறது அறக்கட்டளை.

40 குழந்தைகளுக்கு இலவச இருதய ஆபரேஷன் செய்துள்ளோம். மேலும் 20 குழந்தைகளுக்கான இருதய ஆபரேஷனுக்கு நன்கொடைகள் மூலம் நிதி திரட்டிகொடுத்துள்ளோம்.

சாலிகிராமத்தில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மாத வாடகைக்கு வீடு எடுத்து 30 பேரை தங்க வைத்துள்ளேன்.

ஊனமுற்றோருக்கு நடன பயிற்சி அளித்து நடன குழு ஒன்றையும் துவக்கியுள்ளேன். அவர்களின் நடன நிகழ்ச்சி மூலம் வரும் தொகையில் 12 பேர் பெயரில் தலா ரூ.25 ஆயிரத்தை பாங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக போட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009