'சிவகாசி' படம் தொடர்பான வழக்கில் நடிகர் விஜய், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆகியோர் மன்னிப்பு கோரியுள்ளனர்.
கடந்த 2005ஆம் ஆண்டு இயக்குநர் பேரரசு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த 'சிவகாசி' படம் வெளியானது. இந்தப் படத்தில் வழக்கறிஞர்களைப் புண்படுத்தும் விதமாக காட்சிகள் இருந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரகுபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகர் விஜய், படஅதிபர் ஏ.எம்.ரத்தினம், இயக்குனர் பேரரசு, காமெடி நடிகர் ஆகியோர் வருத்தம் தெரிவித்து மனுக்களை தாக்கல் செய்தனர்.
நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவில், ''சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை அவதூறு செய்ததாக 13 வழக்குகள் பல்வேறு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றங்களில், பல்வேறு வழக்கறிஞர்களினால் என்மீதும், படஅதிபர், இயக்குநர் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கறிஞர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு நான் உடனடியாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
பொதுவாக வழக்கறிஞர் தொழில் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. 'தமிழன்' என்ற படத்தில் வழக்கறிஞர்களின் புகழை உயர்த்தும் வகையில் நான் வழக்கறிஞராக நடித்துள்ளேன். இதிலிருந்து வழக்கறிஞர்கள் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறேன் என்பது தெரியும். வழக்கறிஞர்களை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. வழக்கு தொடர்ந்தவர்களுக்கும், எனக்கும் எந்த விரோதமும் கிடையாது. இவர்களை எனக்கு தெரியாது. சிவகாசி படத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வழக்கறிஞர்களின் உணர்வுகளை துன்புறுத்துவதாக கருதினால் நான் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று மனுவில் விஜய் கூறியுள்ளார்.
வழக்கறிஞர்கள் தரப்பில் ஆஜரான தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ். பிரபாகரன், "எதிர்காலத்தில் இதுபோன்று வழக்கறிஞர் தொழிலை இழிவுப்படுத்தி காட்டும் சினிமா படங்கள் வரக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, நீதிபதி ரகுபதி வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தார்.
0 comments:
Post a Comment