Sunday, July 12, 2009

நாஞ்சில் மீன் குழம்பு - Naangil Fish Curry

தேவையான பொருட்கள்:
மீன்(ஏதேனும் வகை) - 6 முதல் 7 துண்டுகள்
புளி - சின்ன எலுமிச்சம் பழ அளவு

வறுத்து அரைக்க:
தேங்காய் - ஒரு சிறிய முறி (பொடியாக துருவிக் கொள்ளவும்)
பெரிய வெங்காயம் – 1 அல்லது சின்ன வெங்காயம் - 8
மல்லி விதைகள்(தனியா) - 3 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 10
பெருஞ்சீரகம் - 1 மேசைக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 3 நெட்டுகள்


தாளிக்க:
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி

செய்முறை:
•மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
•புளியை ஊற வைத்துக் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.அதனுடன் ஒரு நெட்டு கறிவேப்பிலை மற்றும் இரண்டு பச்சை மிளகாய்களை நீள வாக்கில் நறுக்கி சேர்த்துக் கலக்கி வைத்துக் கொள்ளவும்.
•மல்லி ,காய்ந்த மிளகாய் ,மிளகு, பெருஞ்சீரகம், இரண்டு நெட்டு கறிவேப்பிலை இவற்றுடன் ஒரு பெரிய வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.சின்ன வெங்காயம் பயன்படுத்துவதாக இருந்தால் நறுக்கத் தேவையில்லை.
•தேங்காயை சிறு துருவல்களாக துருவி எடுத்துக் கொள்ளவும்.
•அடுப்பில் வாணலியை வைத்து அரை கரண்டி எண்ணெய் விட்டு தேங்காய் துருவலையும் இதர பொருட்களையும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.தேங்காய் நன்கு பொன்னிறமாக பொலபொலவென ஆகும் வரை வறுக்க வேண்டும்.
•இதை ஐந்து நிமிடங்கள் ஆற வைத்து பின் மிக்ஸியில் இட்டு நீர் விடாமல் நன்கு பொடித்துக் கொள்ளவும்.
•அதன் பின்னர் அரை கப் நீர் சேர்த்து நன்றாக மை போல் அரைத்துக் கொள்ளவும்.(முதலிலேயே நீர் சேர்த்து அரைத்தால் நன்கு அரையாது, மை போல் அரைத்தால் தான் சுவை கூடும்.)
•ஏற்கனவே கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலுடன் இந்த விழுதை சேர்த்து தேவையான உப்பு போட்டு நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
•வாணலியை அடுப்பில் வைத்து அரை கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயத்தை இட்டு தாளித்துக் கொள்ளவும்.வெந்தயம் பொன்னிறமானதும் கரைத்து வைத்துள்ள குழம்புக்கலவையை ஊற்றவும்.
•குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் மீன் துண்டுகளை சேர்க்கவும்.
•மூடியை சிறிது திறந்திருக்குமாறு மூடி பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும்.
•மணமணக்கும், நாவூறும் நாஞ்சில் மீன் குழம்பு தயார். சூடாக்கி இரண்டு நாள் வைத்திருந்து சாப்பிடலாம்.அடுத்த நாள் இன்னும் சுவை கூடும்.

குறிப்பு:
மண் சட்டியில் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். இதில் மீன் துண்டுகளுடன் முருங்கைக்காய் சேர்த்து செய்தால் வாசமாக இருக்கும். கண்டிப்பாக ஒரு முறை முருங்கைக்காய் சேர்த்தும் செய்து பாருங்கள். மத்தி மற்றும் நெத்திலி மீன்களுடன் கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கி சேர்த்தும் செய்யலாம்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009