டயானா மரியம் குரியன். கேரளாவின் சிற்றூரில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த இந்த இளம் பெண் இப்போது உலகுக்கே தெரிந்த நடிகை. இந்த பிரபலத்துக்கு அடித்தளமாக அமைந்தது, சத்தியன் அந்திகாடின் மனசின் அக்கரை. இந்தப் படத்தில்தான் டயானா மரியம் குரியன் நயன்தாரா என்ற நாமகரணத்துடன் திரைத்துறையில் நுழைந்தார்.
முதல் படம் வெளிவந்தது 2003. ஆறே வருடங்கள், தென்னிந்தியாவின் நெ.ஒன் நடிகை. கேரியரில் நடந்த இந்த மாற்றம் அவரது கேரக்டரிலும் பிரதிபலிக்கிறது. முன்பெல்லாம் கிசுகிசுவைப் படித்தால் கோபம் வரும் என்றவர் இப்போது வேறு மாதிரி சொல்கிறார்.
"ஆரம்பத்தில் கிசுகிசுக்கள் என்னை பாதித்தது உண்மைதான். ஆனால் இப்போது அதை பொருட்டாக நினைப்பதே இல்லை. வேலை இல்லாதவர்கள்தான் கிசுகிசுவை பரப்புகிறார்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது."
உங்களைக் குறி வைத்து கிசுகிசு வர என்ன காரணம்?
"நான் தமிழ், தெலுங்கு, மலையாளம் மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறேன். கிசுகிசு வர இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்."
நீங்கள் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வருகிறதே...?
"நான் என்னுடைய காதலை மறைத்தது இல்லை. முறிந்துபோன என்னுடைய காதல் எல்லோருக்குமே தெரியும். அதுபற்றி இனி நான் பேச விரும்பவில்லை. அப்புறம் திருமணம். அது ரொம்ப முக்கியமான விஷயம். என்னுடைய திருமணத்தை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. திருமணம் செய்வதாக இருந்தால் எல்லோருக்கும் அறிவித்துவிட்டுதான் செய்வேன்."
நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்புகிறீர்களா?
"ஒருவகையில் நான் அதிர்ஷ்டக்காரிதான். முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டேன். ரஜினிகாந்துடன் சந்திரமுகி, குசேலன் படங்களில் நடித்ததை மறக்க முடியாது."
ரஜினியுடன் நடித்த அனுபவம்...?
"தன்னுடைய ஷாட் முடிந்ததும் எழுந்து போகிற நடிகரல்ல ரஜினிகாந்த். அடுத்தவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக வர வேண்டும் என்று நினைக்கிறவர்."
ரொம்பவும் கிளாமராக நடிக்கிறீர்கள் என்ற குற்றச்சாற்று உள்ளதே...?
"இயக்குனர்கள் உருவாக்குகிற கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். அவர்கள்தான் அந்த கதாபாத்திரம் எப்படி நடிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். கதைக்கு, கதாபாத்திரத்துக்கு தேவையில்லையென்றால் நிச்சயம் கிளாமராக நடிக்க மாட்டேன்."
இனி கிளாமராக நடிக்கப் போவதில்லை என்று தீர்மானத்திருக்கிறீர்களாமே?
"யார் சொன்னது. கிளாமர், பிகினி எல்லாம் திரை வாழ்க்கையின் ஒரு பாகம். முடியாது என்று மறுக்க முடியாது. இனியும் நிறைய படங்களில் கிளாமராக நடிப்பேன்."
இந்த வருட பிறந்தநாள் எப்படி அமைந்தது?
"ரொம்ப சந்தோஷமாக இருந்தது. முதல் நாள் இரவிலிருந்தே வாழ்த்துகள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். போனை வைக்கவே முடியவில்லை. நமக்கு வாழ்த்து சொல்ல இத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதே தெம்பாக இருந்தது."
தற்போது என்னென்ன படங்களில் நடித்து வருகிறீர்கள்?
"மலையாளத்தில் சித்திக் இயக்கத்தில் திலீப் ஜோடியாக பாடிகாட் படம், தெலுங்கில் அடூர்ஸ், தமிழில் ஆர்யா ஜோடியாக பாஸ் என்கிற பாஸ்கரன். இதை சிவா மனசுல சக்தி ராஜேஷ் இயக்குகிறார்."
இதுவரை சினிமாவில் என்ன சாதித்து இருக்கிறீர்கள்?
"நிறைய சாதிக்க இருக்கிறது. இப்போதைக்கு இயக்குனர்களுக்கு தொந்தரவு கொடுக்காத நடிகை என பெயர் வாங்கியிருக்கிறேன். அதுவே ஒரு சாதனைதான்."
0 comments:
Post a Comment